மீனவர் பிரச்சினை: 17ம் தேதி திமுக உயர் மட்டக் குழு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் விவகாரம் குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்க வருகிற 17ம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொட்டதற்கெல்லாம் சுடுவதும், உயிரைப் பறிப்பதுமாக உள்ளனர். அவர்களின் கொலை வெறித் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஆனால் இதுவரை ஒருமுறை கூட மத்திய அரசு இலங்கையை உறுதியான குரலில் எச்சரித்ததில்லை. இந்திய மீனவர்களை காக்க இதுவரை இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் எந்த முயற்சியையும் மேற்கொண்டதாக வரலாறும் இல்லை.

இந்த அக்கிரம அவலம் குறித்து மாநில அரசு பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அது உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 நாகை மாவட்ட மீனவர்களை கொன்று குவித்தது இலங்கை கடற்படை. அத்தோடு நேற்றும் நாகை மீனவர்களை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்து விரட்டியடித்துள்ளது.

இலங்கை கடற்படையின் இந்த தொடர் தாக்குதல்களால் ராமநாதபுரம், நாகப்பட்டனம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்ைத அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் வெறிச் செயலை அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்த நிலையில், திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு கூட்டம் வருகிற 17ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், கடலில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டினைத் தாண்டி மீன் பிடித்திட வந்தார்கள் என்று சாக்கிட்டு, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்கிற கொடுமை தொடர்ந்து நடந்திடுவதை உடனடியாக நிறுத்திடவும், தடுத்திடவும், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் நாட்டளவில் எத்தகைய கண்டனத்தைத் தெரிவிப்பது என்பதை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்திட வருகிற 17ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் கூடி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக மிக மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவே திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுவை அக்கட்சி கூட்டுவது வழக்கம். சமீபத்தில் கூட பாமகவுடனான உறவை முறிக்கும் முடிவையும் இக்கூட்டம்தான் எடுத்தது. இந்த நிலையில் மீனவர் விவகாரம் தொடர்பாக கடுமையான முடிவை திமுக எடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+