காங்.கில் ராஜசேகர், ஜீவிதா-சிரஞ்சீவிக்கு எதிராக போட்டியிட ரெடி
ஹைதராபாத்: நடிகர் ராஜசேகரும், அவரது மனைவி ஜீவிதாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.ஆந்திர மெகாஸ்டார் சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்கப போகிறார். அடுத்த மாதம் அவரது புதிய கட்சி பிறக்கிறது. இந்த நிலையில் நடிகர் ராஜசேகரும், அவரது மனைவி நடிகைஜீவிதாவும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகரிடம் நிருபர்கள், சிரஞ்சீவியில் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் எந்தக் கட்டாயமும் இல்ைல. சிரஞ்சீவி அரசியல் அனுபவம் இல்லாதவர் என்று காட்டமாக கூறினார். இதையடுத்து அவர் ஹைதராபாத் வந்தபோது சிரஞ்சீவி ரசிகர்கள் ராஜசேகரின் காரைத் தாக்கினர். இதில் அவரது குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ராஜசேகர் வீட்டுக்கு விரைந்து சென்ற சிரஞ்சீவி, அவரிடமும், ஜீவிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் நேற்று ராஜசேகரும், ஜீவிதாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி, முதல்வர் ராஜசேகர ரெட்டி, மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் ஆகியோர் முன்னிலையில் ராஜசேகர் தம்பதியினர் காங்கிரஸில் இணைந்தனர்.
இருவருக்கும் உறுப்பினர் அட்டைகளை வீரப்ப மொய்லி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜசேகர் பேசுகையில், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் ராஜசேகர ரெட்டி அரசு ஆகியவை செய்துள்ள மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்டே காங்கிரஸில் இணைய முடிவு செய்தோம்.
முதல்வரின் கரத்தை வலுப்படுத்தப் போகிறேன். கட்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன்.
சிரஞ்சீவியை எதிர்த்துப் போட்டியிடுமாறு கட்சி கோரினால், உத்தரவிட்டால் நிச்சயம் நான் போட்டியிடுவேன்,. கட்சிக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றார் ராஜசேகர்.
சிரஞ்சீவியை சமாளிக்கத்தான் ராஜசேகரை காங்கிரஸ் கட்சி இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிரஞ்சீவிக்கு எதிராக ராஜசேகர் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.