நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வோம்-பிரதமர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெறும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் பாரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நமது அணுசக்தி தொடர்பான முன்னேற்ற திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது. உதவியாகத் தான் இருக்கும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை இந்திய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், அதற்கு ஆதரவு தர வேண்டும்.
சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் செய்து கொள்ளப் போகும் பாதுகாப்பு ஒப்பந்தத்தால், இந்தியாவின் அணுசக்தி தொடர்பான திட்டங்கள் பாதிக்கப்படலாம் என இடதுசாரிகளும், பாஜகவும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், அப்படி எதுவும் நடக்காது.
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, எரிசக்தி சவால்களை சமாளிக்க , உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய, நல்ல காரியத்திற்காக அணு சக்தியை பயன்படுத்த இந்த ஒப்பந்தம் அவசியம்.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தால், அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகளின் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா பெற முடியும்.
இந்தியா ஒரு தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அந்த விஷயத்தில் எந்த அன்னிய நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து ஆசிய நாடுகளுடனும் நல்லுறவைப் பேண இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், விலைவாசியை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதை உறுதி செய்யவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதே, பணவீக்க அதிகரிப்புக்கு காரணம். இந்த பணவீக்கத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
விவசாய உற்பத்தியை பெருக்க, விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் எனது தலைமையிலான அரசு வெற்றி பெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் 22ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறும். மத்திய அரசு எடுத்து வரும் முன் முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவற்றை ஆதரிக்கின்றனர்.
சர்வதேச அணுசக்தி கழகம், என்எஸ்ஜி ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களால், அணுசக்தி துறையில் இந்தியாவை தனிமைப்படுத்திய சகாப்தம் முடிவுக்கு வரும்.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் போர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. போர் திட்டங்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. அது சர்வதேச அணுசக்தி கழகத்துடனான ஒப்பந்தத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்றார்.
280 எம்பிக்கள் ஆதரவு?:
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வீரப்ப மொய்லி நிருபர்களிடம் பேசுகையில், ஓட்டெடுப்பில் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறோம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இடதுசாரி கட்சிகளும் பாராளுமன்றத்தில் 259 எம்.பிக்களுக்கு மேல் ஆதரவு திரட்ட முடியாது என்றார்.
தங்களுக்கு 280க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் ஆதரவு கிடைக்கும் என அக் கட்சி கணக்கிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications