இலங்கை தூதரகம் முன் சிபிஐ ஆர்பாட்டம்
சேலம்: தமிழ மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து அந்நாட்டுத் தூதரகம் முன்பு வரும் 30 ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் துவக்க விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியாதவது:
தமிழக மீனவர்களை மட்டும் இன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும்.
இந்திய குடி மகன் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவுக்கே அவமானம். இதை வலியுறுத்தி வரும் 30 -ம் தேதி அன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் .
ஒசூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அரசு விளை நிலத்தை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது. அதை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாளை சாலை மறியல் நடத்தப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி தொண்டன் உயிர் உள்ளவரை பாஜகவுன் உறவு என்பது நடக்கவே நடக்காது.
அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகளை பொடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டத்தில் கைது செய்வதை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கின்றது.
பயங்கரவாதிகளை தவிர இந்த சட்டத்தில் மற்றவர்களை கைது செய்தவது நல்லது அல்ல, என்றார் பாண்டியன்.