இந்தியர் வாழ்க்கை தரத்தை உயர்த்த மலேசிய அரசு நிதி ஒதுக்கீடு
கோலாலம்பூர்: மலேசியாவில் வறுமையில் தவிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 120 மில்லியன் ரிங்கிட் தொகையை- கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்- மலேசிய அரசு அனுமதித்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தவணை முறையில் இந்தத் தொகை செலவழிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இத் தகவலை, மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ சாமிவேலு சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் மட்டும் 20 லட்சம் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் வசிக்கிறார்கள். சர்வதேச அளவில் மலேசியா ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்கப்பட்டாலும், அங்கு வாழும் இந்தியர்களின் நிலையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லைமலிருந்தது.
இந்த வெறுப்புணர்வு காரணமாகவே, கடந்த ஆண்டு தேர்தல்களில் டத்தோ சாமிவேலு கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அவரும் முதல்முறையாக தோல்வியைச் சந்தித்தார். மலேசியாவில் முதல் முறையாக ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையவும் இதுதான் காரணமாயிற்று.
மலேசிய இந்தியர்களின் கோபத்தை உணர்ந்து, அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 300 மில்லியன் ரிங்கிட்டுகளை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டது மலேசிய இந்திய காங்கிரஸ்.
அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியர் நலன் காக்க மேலும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காகவே, துணைப் பிரதமர் நஜப் துன் ரசாக் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகவும் சாமிவேலு கூறினார். மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இக்குழு வழிவகை செய்யும்.
இதற்கிடையே, இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் சிறப்பான முறையில் நிறைவேற்றித் தருவோம் என மலேசிய பிரதமர் அப்துல்லா படாவி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூருக்கு வெளியே அமைந்துள்ள மலேசியாவின் புதிய தலைநகரான பட்ருங்ஜயாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத் தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். இனி மலேசியாவில் அனைத்து இனங்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அதை எனது தலைமையிலான அரசு இப்போதே உறுதி செய்கிறது.
நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையும் அதற்கேற்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரிவினருக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திவிட்டு வரும் 2010-ம் ஆண்டில் நான் அரசியலிலிருந்து விலகிவிடுவேன், என்றும் படாவி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications