பிரதமர் அலுவலகம் பேர மையமாகி விட்டது: பாஜக தாக்கு

தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் அத்வானி வீட்டில் நடைபெற்றது. பின்னர் பாஜக செய்தித் தொடர்பாளர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆதரவு எம்.பிக்களைப் பிடிக்க பிரதமர் அலுவலகத்தை பேர மையமாக மாற்றி விட்டது காங்கிரஸ். அரசைக் காப்பதற்காக பேரம் நடத்தும் மையமாக பிரதமர் அலுவலகத்தை மாற்றியிருப்பது வருத்தம் தருகிறது.
நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அகற்றும் வகையில், ஜூலை 22ம் தேதி அனைவரும் ஒருமித்து செயல்படுவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. அரசுக்கு எதிராக அனைவரும் வாக்களிப்போம். என்ன மாதிரியான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
அரசுக்கு எதிரான வாக்குகள் பெருகிக் கொண்டே போகின்றன. ஆதரவு வாக்குகள் குறைந்து கொண்டே வருகின்றன.
சிரோன்மணி அகாலிதளம் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்கும் என்று கூறுவது தவறான செய்தி. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அகாலிதளம் இடம் பெற்றுள்ளது. அதுவும் அரசுக்கு எதிராக வாக்களிக்கும். இதுகுறித்து அகாலிதள தலைவரும், பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் தெளிவுபடுத்தியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கவனம் செலுத்தவில்லை. மாறாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, பண வீக்கம், விவசாயிகள் துயரம், உணவு நெருக்கடி, உள்நாட்டுப் பாதுகாப்பு,வெளியுறவுக் கொள்கை என பல விஷயங்களிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். மக்களிடம் கொண்டு செல்கிறோம்.
இந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விரைவில் தேர்தல் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் ஜெட்லி.












Click it and Unblock the Notifications