ஆகஸ்ட் 20ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்
சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, ஆன்லைன் வர்த்தகத்துக்கு கடன் வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலர் வெங்கடாசலம் கூறுகையில், வங்கிகள் இணைப்பு கொள்கையை அரசு கைவிட வேண்டும். வங்கிகளை இணைப்பதால் எந்த பயனும் ஏற்படாது. வங்கிகளில் வெளிநாட்டு முதலீடுகளை தாராளமாக அனுமதிக்கக் கூடாது.
வங்கிகள் இல்லாத பகுதிகளில் புதிய கிளைகளை திறக்க வேண்டும். வங்கித்துறை சீர்திருத்தம் தொடர்பாக ஹோடா கமிட்டி, ரகுராம் ரஞ்சம் கமிட்டிகள், வங்கிகளை தனியார் மயமாக்கலை பரிந்துரைக்கின்றன. அவற்றை அரசு நிராகரிக்க வேண்டும்.
விவசாயத்துக்கு போதுமான கடன் அளிக்காதபோது உணவு பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு அதிக கடன் அளிக்கப்படுகிறது. இதனால் உணவு பொருட்கள் பதுக்கப்பட்டு, அவற்றின் விலை அதிகரிக்கிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்துக்கு கடன் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
நாடு முழுவதும் 2,369 வங்கிக் கணக்குகளில் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன் அளிக்கப்பட்டது. இந்த கடனை தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் திருப்பி செலுத்தவில்லை.
இதில் தமிழகத்தில் மட்டும் 225 வங்கி கணக்குகளில் ரூ.1,643 கோடி கடனை வர்த்தக நிறுவனங்களும் தனிநபர்களும் திரும்ப செலுத்தவில்லை. இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்க எடுக்க வேண்டும்.
அதேப்போல வாராக்கடன் ரூ.40,000 கோடி உள்ளது. இதை வசூலிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி ஜூலை 19ம் தேதி பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றும் தின பிரசாரம் செய்ய உள்ளோம்.
இதையடுத்து ஆகஸ்ட் 20ம் தேதி அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.