அரியலூரில் 20 வன்னியர் சமூக போலீஸார் இடமாற்றம்: டிஜிபியிடம் பாமக புகார்
சென்னை: அரியலூரில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டிஜிபி ஜெயினிடம் பாமக சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் டிஜிபி ஜெயினை, பாமக தலைவர் ஜி.கே.மணி நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காடுவெட்டி குரு கைது செய்யப்பட்ட பின்னர் அரியலூரில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த 20 போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மீண்டும் பழைய பணியிடத்திலேயே நியமிக்க வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
குரு கைதைத் தொடர்ந்து அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக வன்னியர் சங்க நிர்வாகிகளை துரத்தி துரத்தி போலீஸார் கைது செய்து வருகின்றனர். அவர்கள் பதிவு செய்யும் முதல்தகவல் அறிக்கையில் மற்றும் பலர் என சேர்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் கணக்கில் அடங்காத அளவுக்கு பலரையும் கைது செய்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக வன்னியர் சங்க நிர்வாகிகளும், பிரமுகர்களும் ஓடி ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபியிடம் கோரியுள்ளோம் என்றார்.