சென்னையில் மீண்டும் கொலை முயற்சி - தப்பிய வாட்ச்மேன்!
சென்னை: சென்னையில் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் ஒரு வாட்ச்மேனைக் கொல்ல மர்ம மனிதன் முயன்றுள்ளான். ஆனால் மக்கள் கூடியதால் அவன் தப்பி ஓடி விட்டான். வாட்ச்மேன் நூலிழையில் உயிர் தப்பினார்.
சென்னை வட பழனி, மாம்பலம், அசோக் நகர் பகுதிகளில் சைக்கோ மனிதனால் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. இதனால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். யார் கொலைகளைச் செய்வது என்று இதுவரை எந்த துப்பும்கிடைக்கவில்லை.
இதுவரை 8 பேர் சைக்கோ மனிதனின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இன்னொரு கொலை முயற்சி நடந்துள்ளதால் மக்கள் பெரும் பதட்டமடைந்துள்ளனர்.
அசோக் நகர் செளந்தரபாண்டியன் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாட்ச்மேன் ஆக இருப்பவர் சேகர். இவர் இன்று அதிகாலையில் பணியில் இருந்தபோது அங்கு ஒரு மர்ம மனிதன் நுழைந்தான்.
சேகரை கொல்ல அவன் முயன்றுள்ளான். தொடர் கொலைகளால் ஏற்கனவே சுதாரிப்பாக இருந்த சேகர், உடனடியாக அருகில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினார். இதையடுத்து அனைத்து வீடுகளிலும் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
இதைப் பார்த்த அந்த மர்ம மனிதன் சேகரை விட்டு விட்டு ஓடி விட்டான். நூலிழையில் சேகர் உயிர் தப்பினார்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போக அவர்கள் மின்னலென விரைந்து வந்தனர். சேகர் கூறிய அடையாளங்களை வைத்து மர்ம மனிதனைப் பிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சேகர் கூறுகையில், மர்ம மனிதன் காலர்இல்லாத சட்டையும், அரைக் கால் சட்டையும் (டிராயர்) போட்டிருந்தான். கையில் கத்தி இருந்தது. பார்க்க கைதி போல இருந்தான். மக்கள் கூடி விட்டதால் என்னை விட்டு தப்பி விட்டான். அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைத்தேன் என்றார்.
போலீஸார் தீவிர ரோந்து மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இன்னொரு கொலை முயற்சியில் மர்ம மனிதன் ஈடுபட்டுள்ளது சென்னை போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடிந்தால் எங்கு கொலை நடக்குமோ என்ற பீதியில் சென்னை மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
--