மாயாவதி, பரதனுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
டெல்லி: உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் ஆகியோரை, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லி வந்த சந்திரபாபு நாயுடு முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏபி.பரதன், தேசிய செயலாளர் ராஜா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து சிபிஐ தேசியசெயலாளர் ஷமீம் பைசி கூறுகையில், நம்பிக்ைக வாக்ெகடுப்பு தொடர்பாக பிராந்திய கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் வேலையை தான் மேற்கொள்வதாக நாயுடு தெரிவித்தார்.
உடனடியாக இந்த வேலையை தொடங்கும்படியும், பிராந்திய கட்சிகளின் ஆதரவைத் திரட்டும்படியும் நாங்கள் நாயுடுவைக் கேட்டுக் கொண்டோம்.
எங்களது கோரிக்கை என்னவென்றால் நம்பிக்ைக வாக்கெடுப்புக்கு முன்பாகவே பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். ஆளுங்கூட்டணிக்கு போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லை. எனவே அவர்கள் கெளரவமாக விலகிக் கொள்வது நல்லது. அதை விட்டு விட்டு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி விரைவில் உடைந்து சிதறும். ராஷ்டிரிய ஜனதாதளம், பாமக, லோஜ் ஜன சக்தி கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் உள்ளனர் என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்த பின்னர் மாயாவதியை சந்தித்தார் நாயுடு. கிட்டத்தட்ட முக்கால்மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாயாவதி பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று பரதன்கூறியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏன் மாயாவதி பிரதமர் ஆகக் கூடாது?
பிரதமர் பதவிக்கான முழுத் தகுதிகளும் மாயாவதியிடம் உள்ளது. நாட்டின் உயரிய பதவிக்குரிய தகுதிகளுடன் கூடியவர்தான் அவர்.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் மாயாவதி இனி முக்கியப் பங்காற்றுவார் என்றார் நாயுடு.
சிபிஎம் மத்திய குழு கூட்டம்:
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு இன்று கூடி விவாதித்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மூத்த தலைவர்கள் சீதாராம் எச்சூரி, வி.எஸ்.அச்சுதானந்தன், புத்ததேவ் பட்டச்சார்யா, மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்பு பொலிட்பீரோ கூட்டமும் நடந்தது.












Click it and Unblock the Notifications