மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை தூதருக்கு இந்தியா கண்டனம்!
டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. முதல் முறையாக இலங்கை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இத்தனை காலமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தி வந்தபோதும் இதுவரை இலங்கை அரசை மத்திய அரசு ஒருபோதும் உறுதியான குரலில் கண்டித்ததில்லை.
இந்த நிலையில் இலங்கை கடற்படைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், கச்சத்தீவை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், நேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) ரவி, இலங்கை தூதர் ஜெயசிங்கேவை நேரில் அழைத்து கடற்படை தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களை தாக்குவது, சுட்டுக் கொல்வது, படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களை இலங்கை கடற்படை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த 12ம் தேதி நாகை மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணை குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் ரவி உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் மீது மனிதாபிமானத்துடன் நடக்க இலங்கை அரசும், கடற்படையும் முயற்சிக்க வேண்டும் என்றும் ரவி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications