மாயாவதியால் பிரதமராக முடியாது: லாலு
டெல்லி: மாயாவதி பிரதமர் பதவிக்கு வரநினைக்கிறார். ஆனால் அது நடக்காது என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்றக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் லாலு பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக எம்பிக்களுக்கு ரூ.25கோடி கொடுக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரதன் குற்றம் சாட்டியுள்ளார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியவில்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டின் மூலம் கட்சிகளின் மதிப்பையும், எம்பிக்களின் மதிப்பையும் பரதன் களங்கப்படுத்தியுள்ளார். இதற்காக நாடு அவரை மன்னிக்காது. இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவர் அவமதித்து விட்டார்.
ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை தகர்ப்பதற்கான சதிதான் அவரது குற்றச்சாட்டு. அரசுக்கு 291 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும். ஒன்று, 2 எம்பிக்களை கொண்ட கட்சிகளுக்கு இது யோக காலம். இது அவர்களின் சீசன்.
அத்வானியும், மாயாவதியும் பிரதமராக ஆசைப்படுகின்றனர். எனக்கும் கூட பிரதமராக ஆசைதான். ஆனால் முடியுமா?. எனவே மாயாவதியால் பிரதமர் பதவிக்கு வர முடியாது என்றார் லாலு.












Click it and Unblock the Notifications