வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்-பிரதமர்

லோக்சபாவில் இன்று மத்திய அரசு நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்த பிரதமர், குரு கோபிந்த் சிங்கின் வாசகங்களை மேற்கோள்காட்டி பேசினார். அவர் கூறுகையில்,
இந்த அரசு, நாட்டுக்கு என்ன செய்தது என்பதை நாட்டு மக்கள் கருத்தில் கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் நாங்கள் வெல்வோம். இன்று இந்த அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்துள்ளன.
கருணாநிதிக்கு பாராட்டு:
இந்த அரசு 4 ஆண்டுகள் நிலையான ஆட்சி நடத்தியதற்கான பெருமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும், சோனியா, ஜோதிபாசு, ஹரிகிஷன்சிங் சுர்ஜித் மற்றும் கருணாநிதி ஆகியோரை சாறும். அவர்களின் தொலைநோக்கும், மதிநுட்பத்தாலும் இந்த அரசை முறையாக நடத்த முடிந்தது.
இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், முடிவும் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழலை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
பணவீக்கத்தை சமாளித்து கொண்டும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், மக்களின் வேதனைகளைப் போக்கும் நடவடிக்கைகளை எடு்த்துக் கொண்டும் உள்ள நிலையில் அரசின் முழு கவனமும் இப்போது இந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது திருப்பப்பட்டது துரதிஷ்டவசமானது.
அணு ஒப்பந்தம் தொடர்பாக ஐஏஇஏ மற்றும் என்எஸ்ஜியுடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இந்த அவையில் ஒப்புதல் கோருவேன் என்று கூறியிருந்தேன். அதையே இப்போதும் சொல்ல விரும்புகிறேன்.
நான் ஜப்பானில் ஜி-8 மாநாட்டில் இருந்தபோது அரசுக்கான ஆதரவு பெறப்பட்டதாக எனக்கு தகவல் வந்தது.
காங்கிரஸ் தேசப்பற்று மிகுந்த கட்சி. சுதந்திர போராட்டத்தை பரம்பரை சொத்தாக கொண்டது. ராஜீவ் காந்தியின் உறுதிமொழிக்கேற்ப 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் நாட்டை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டெல்லாம் தவறானவை.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அணு ஒப்பந்தம் மீதான மட்டுமல்ல, இந்த அரசின் 4 ஆண்டு செயல்பாடுகள் மீதானதுமான ஓட்டெடுப்பு. இந்த அரசுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications