நாங்களா மைனாரிட்டி?-பிரணாப் முகர்ஜி ஆவேசம்
டெல்லி: நாங்கள் மைனாரிட்டி அரசு அல்ல. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம் என்று லோக்சபாவில் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான விவாதத்தின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், நாங்கள் 276 பேர் இருக்கிறோம். இதை மைனாரிட்டி என்று கூறமுடியாது. இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்ற போது கூட கட்சியில் 273 பேர் இருந்தோம். அப்போதும் மைனாரிட்டியாக இல்லை.
அணுசக்தி தொழில்நுட்பத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு நிச்சயம் வெற்றி பெறும்.
அணு ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை எதிர்கட்சி தலைவர் அத்வானி திரித்து கூறுகிறார். அரசின் ஸ்திரத்தன்மையை நாங்கள் கெடுக்கவில்லை. அதற்கு இடதுசாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இடதுசாரிகள் வெளியேறியபோது சமாஜ்வாடி ஆதரவு தெரிவித்தது. சமாஜ்வாடி கட்சியின் 39 எம்பிக்களுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் இப்போது 276 ஆக உள்ளது. நாட்டின் நலன் குறித்த எந்த விஷயத்திலும் ஐக்கிய முற்போக்கு அரசு தனது கடமையை விட்டுக் கொடுக்காது என்றார் பிரணாப்.