3 பாஜக எம்பிக்களுக்கு சமாஜ்வாடி தலா ரூ. 9 கோடி- அத்வானி புகார்

சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் பணக் கட்டுகளை அவையில் மத்தியில் உள்ள டேபிளில் கொட்டிய மத்திய பிரதேசத்தின் மொரீனா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் ஆக்ரால், இந்தப் பணத்தை தனக்கு சமாஜ்வாடி கட்சி தந்ததாக குற்றம் சாட்டினார்.
இரண்டு பைகளில் அவர் இந்தப் பணத்தை எடுத்து வந்தார். தையடுத்து பிற பாஜக எம்பிக்களும் அவையில் மையத்தில் குவிந்து அரசுக்கு எதிராக குரல் தந்தனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை உடனடியாக ஒத்தி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து பாஜக தலைவர் அத்வானி கூறுகையில் பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகிய 3 பாஜக எம்பிக்களுக்கு வாக்களிக்க வர வேண்டாம் என்று கூறி தலா ரூ. 3 கோடிக்கு பேரம் பேசப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக ரூ. 1 கோடி பணம் தரப்பட்டுள்ளது. இதை அவர்கள் என்னிடம் தெரிவித்து, அதை மக்களவையிலேயே காட்டுவதாகக் கூறினர். இதையடுத்து நானும் பணத்தை மக்களவைக்கு கொண்டு வர அனுமதி தந்தேன்.
வாக்களிக்க வராமல் இருந்தால் மேலும் தலா ரூ. 1.5 கோடி தருவதாகக் கூறியுள்ளனர். இதற்கான மொத்த டீல் ரூ. 9 கோடி. கடந்த 3, 4 நாட்களாக இந்தப் பணம் தரப்பட்டது.
இந்த பணம் கைமாறியதை ஒரு தனியார் தொலைக்காட்சி பதிவு செய்துள்ளது. அது எந்த சேனல் என்பதை நான் சொல்ல முடியாது என்றார்.
(அந்த தனியார் சேனல் சிஎன்என்-ஐபிஎன் ஆகும். ஆனால், அந்த வீடியோவை சபாநாயகரிடம் ஒப்படைக்கப் போவதாகவும், அதை ஒளிபரப்பப் போவதில்லை என்றும் அதன் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார்).
பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகியோர் கூறுகையி்ல், எங்களிடம் ஒரு மத்தியஸ்தர் பேசினார். எங்களை அமர் சிங்கின் வீட்டுக்கு போகச் சொன்னார். அங்கு வைத்து அட்வான்ஸ் பணமாக ரூ. 1 கோடி தரப்பட்டது.
மேலும் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலிடம் தொலைபேசியில் பேச வைத்தார் என்றனர்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்க தனது சேம்பரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார்.
அவை 6 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications