அரசுக்கு ஆதரவு-தயாநிதிக்கு வீரமணி பாராட்டு
சென்னை: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று கூறிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 22ம் தேதி (இன்று) லோக்சபாவில் சந்திக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன். திமுகவுக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன் என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதிமாறன் அறிவித்ததை திராவிட கழகம் வரவேற்று மகிழ்கிறது. பாராட்டுகிறது.
அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. நீர் அடித்து நீர் விலகாது என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட.
திமுகவை அழிக்க வேறு எவராலும் முடியாது. ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டாகும். அது என்றும் பொருந்தும்.
தயாநிதியின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் தி.க. விடுக்கிறது.
அண்ணா சொன்னது போல நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications