மின் பற்றாக்குறை: ஜெ. தான் காரணம்-கருணாநிதி
சென்னை: ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கியிருந்தால் இப்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: கச்சத்தீவு பற்றி கருணாநிதி கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா கூறுகிறாரே?
பதில்: கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நின்று, கச்சத் தீவை மீட்டே தீருவேன் என முழங்கிய ஜெயலலிதா, ஆட்சியில் இருந்த 2 முறையும் கச்சத்தீவை மீட்டுவிட்டாரா? அல்லது எதையாவது மீட்டிக் கொண்டிருந்தாரா?
கேள்வி: தமிழக மின் வாரியம் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு முயற்சி எடுப்பதற்கு அடிப்படை காரணம் என்ன?
பதில்: தெளிவாக அனைவருக்கும் புரிந்த காரணம்தான். கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளையும், அரசு அலுவலர்களையும், தொழிலாளர்களையும் நசுக்குவதில் காட்டிய ஆர்வத்தை மின் உற்பத்தித் திட்டங்களில் காட்டியிருந்தால் இப்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டேயிருக்காது.
கேள்வி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் போல மத்திய அரசு காட்சி அளிக்கிறது என்ற அத்வானியின் பேச்சு?
பதில்: அவருடைய தகுதிக்கு அந்தப் பேச்சு சரியல்ல.
கேள்வி: பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிலைப்படுத்தியதால் பாஜக கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?
பதில்: 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் உணர்ச்சி வேகத்திற்கு அடிமையாகிறவர்கள் அறவழியில் வெற்றியை அடைய முடியாது. அணுசக்தி ஒப்பந்தம் உட்பட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டு நலனுக்காகவே எடுத்து வருவதாக நேற்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய வார்த்தை வெற்றி பெறும் என்றே நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.