'குரு'-அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வன்னியர் சங்கத் தலைவரும் பாமக பிரமுகருமான காடுவெட்டி குரு தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வர், அமைச்சர்கள், திமுகவினர் குறித்து மிகக் கடுமையாக வி்மர்சித்துப் பேசிய குரு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் 6 வாரத்துக்குள் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
குரு தாக்கல் செய்த மனுவில், என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
திமுகவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தான் என்னை கைது செய்துள்ளதுனர். அவர் மூத்த திமுக தலைவர்களுடன் பேசிவிட்டுத் தான் புகாரே கொடுத்துள்ளார்.
என்னை ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனுவோ அல்லது வேறு உத்தரவோ பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் என மீதான வழக்குகள் குறித்த ஆவணங்களையும் நீதிமன்றம் பெற்று பார்வையிட வேண்டும் என்று கூறியிருந்தார் குரு.