டெல்லியில் கருணாநிதி
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.