9 மீனவர்கள் கரை திரும்பவில்லை- பீதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் கரை திரும்பாததால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு 2 மீனவர்கள் பலியாகினர். இதை கண்டித்து 18 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
ஒருவழியாக கடந்த 21ம் தேதி 746 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் ராமசாமி, லூர்து ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் லூர்துவும், காளிதாஸ், தில்லைமுத்து, வெள்ளைச்சாமி, சதீஷ், முனியசாமி, கருப்பணன், சிவிசன், பாலு ஆகியோர் சென்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
இதையடுத்து மீனவர்களையும், 2 படகுகளையும் தேடி மற்ற மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர் என்று மீன்வள அதிகாரி தெரிவித்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.