குதிரை பேரத்துக்கு கிடைத்த வெற்றி-வைகோ
நெல்லை: நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி தரகு மூலம் கிடைக்க வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் மதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு நன்கொடை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பில் கிடைத்துள்ள வெற்றி, தரகு வேலை மூலம் கிடைத்த வெற்றியாகும். 1999ல் மத்திய அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இது போன்ற வேலையில் ஈடுபடவில்லை.
வாஜ்பாய் தோல்வியை ஆரோக்யமாக எடுத்துக் கொண்டார். ஜனநாயகத்திற்கு இழிவான செயலை மன்மோகன் சிங் அரசு செய்துள்ளது. அந்த அரசு மக்களின் நம்பிக்கையை விரைவில் இழக்கும். தற்போதைய வெற்றி தற்காலிகமானதுதான்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசு வெட்கக்கேடான குதிரை பேரம் போன்ற வெட்கக்கேடானச் செயல்களில் ஈடுபட்டுள்ளது.
குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மத்திய அமைச்சர்கள் அறிவித்தாலும், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிபு சோரன், தனக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
குதிரை பேரத்திற்கு வேறு உதாரணம் இதை விட வேண்டுமா? மன்மோகன் சிங் இதை மறுத்துள்ளாரா? நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் வரும். அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக-மதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
பின்னர் மதுரை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், திராவிட இயக்க வரலாற்றில் மகத்தான இடம்பெறும் வகையில் மதுரையில் மண்டல மாநாடு, அண்ணாதுரை நூற்றாண்டு விழா மாநாடாக செப்டம்பர் 15ம் தேதி நடக்க உள்ளது.
அவரது புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்படும். அணையா விளக்கும் ஏற்றப்படும்.
இலங்கை அரசை கண்டித்து வரும் 27ம் தேதி ராமேஸ்வரத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதம் நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications