நெல்லையில் தனியார் பஸ் கட்டணம் திடீர் உயர்வு
நெல்லை: நெல்லை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் ஓடும் தனியார் பேருந்துகளில் மட்டும் திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை ஜங்ஷனில் இருந்து பாளை மார்க்கெட் வரை ரூ.2ம், ஐகிரவுண்டுக்கு ரூ.3ம் இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆனால் நேற்று முதல் தனியார் பஸ்களில் மார்கெட்டுக்கு ரூ.2.50ம், ஐகிரவுண்டுக்கு ரூ.3.50ம் ஆக கட்டணத்தை உயர்த்தினர். 2 ரூபாய் டிக்கெட்டை ரூ.2.50 என திருத்தியும், எழுதியும், சில பஸ் கண்டக்டர்கள் சீல் வைத்தும் பயணிகளிடம் கொடுத்தனர்.
திடீரென அமல்படுத்தப்பட்ட இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இதுகுறித்து பாளையைச் சேர்ந்த குமார் என்பவர் கூறும்போது, காலை நான் சாமாதானபுரத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு வந்தேன். என்னிடம் கண்டக்டர் ரூ.2.50 வாங்கிக் கொண்டு ரூ.2க்கான டிக்கெட் தான் கொடுத்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது டிக்கெட் கட்டணம் 50 காசு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மற்றொரு தனியார் பஸ் கண்டக்டர் காந்தி கூறும்போது டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்றார்.
நெல்லை மாவட்ட தனியார் பஸ் சங்க செயலாளரைக் கேட்டபோது இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்களாகவே உயர்த்தி உள்ளனர் என்றும் சங்கத்தின் சார்பில் கட்டணத்தை உயர்த்துவதற்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஆனால் பஸ் கட்டணத்தை உயர்த்த முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றும் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்ப்ட்டுள்ளது.