இறந்த பிரமுகர் உடலுடன் தேமுதிக மறியல்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட தேமுதிக தொண்டரணி செயலாளர் பாலாஜியின் உடலுடன், தேமுதிகவினர் இன்று சாலை மறியல் செய்ததால், ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேமுதிக தொண்டரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று மாலை நான்கு மணியளவில் பாலாஜி வீட்டிலிருந்து பைக்கில் ரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது வழியில் இருந்த டாஸ்மாக் கடை அருகே ஒரு கும்பல் பாலாஜியை மடக்கி சரமாரியாக தாக்கினர்.
கத்தி, அரிவாள்களால் தாக்கப்பட்ட பாலாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது கணவர் கொலைக்கு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குமார்தான் காரணம் என உயிரிழந்த பாலாஜியின் மனைவி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து குமார் தலைமறைவாகி விட்டார்.
இன்று காலை ஊரப்பாக்கத்தில் தேமுதிகவினர் பெருமளவில் திரண்டனர். . பிரேத பரிசோதனை முடிந்த மருத்துவமனையிலிருந்து பாலாஜியின் உடலுடன் வந்த ஆம்புலன்ஸை மறித்து ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட மாட்டாது என்றும், ஊராட்சி மன்ற தலைவர் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
தகவல் அறிந்தது கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கூடியிருந்த தேமுதிகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அதிரடியாக இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆம்புலன்ஸில் ஏறி அதை ஓட்ட முயன்றார்.
இதைப் பார்த்த தேமுதிகவினர் ஆம்புலன்ஸ் முன்பு படுத்துக் கொண்டனர். இதனால் மாணிக்கத்தால் ஆம்புலன்ஸை ஓட்ட முடியவில்லை.
பாலாஜியின் உறவினர்களிடமும், தேமுதிக பிரமுகர்களிடமும், ஊர் பொதுமக்களிடம் அவர் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
தேமுதிகவினரின் இந்தப் போராட்டத்தால் ஜி.எஸ்.டி. சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications