அரசு அலுவலகங்களில் மின் சிக்கனம்-உத்தரவு!
சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் அலுவலகங்களிலும் மின் சிக்கனத்தை கடைபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை, சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 2 மணி நேரமும், கிராமங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு போன்ற கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அடுத்ததாக அரசு அலுவலகங்களிலும் அமைச்சர் அலுவலகங்களிலும் மின் சிக்கனம் கடைபிடிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்த சுற்றறிக்கை எரிசக்தி துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேவையற்ற நேரங்களில் லைட், பேன், ஏசி ஆகியவற்றை நிறுத்திவிட வேண்டும். அலுவலர்கள் மேஜைக்கு ஒளி தரும் லைட், பேன் மட்டும் உபயோகிக்க வேண்டும். பகலில் அலுவலக அறைக்கு போதுமான வெளிச்சம் இருந்தால் தாழ்வாரம் மற்றும் நடைபாதைகளில் எரியும் விளக்குகளை நிறுத்தி விட வேண்டும்.
அலுவலகத்தில் 2 ஏசிக்கள் இருந்தால் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம். அறையில் யாரும் இல்லாத நேரங்களில் ஏசி இயக்கத்தை தவிர்க்கலாம். கம்ப்யூட்டர் போன்ற அலுவலக பயன்பாட்டுக் கருவிகளை உபயோகிக்காதபோது நிறுத்தி வைக்கலாம். கம்ப்யூட்டர், மானிட்டர், ஜெராக்ஸ் போன்ற மெஷின்களை பயன்படுத்தாதபோது ஸ்லீப் மோடில் வைத்தால் 40 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
ஜெராக்ஸ் மிஷினை அடிக்கடி பயன்படுத்தாமல், நகலெக்கும் பணிகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தவும். லேப்-டாப், மொபைல் ஆகியவற்றை சார்ஜ் செய்தவுடன் இணைப்பை துண்டித்து விட்டால் மின்சாரம் வீணாவதை தவிர்க்கலாம்.
இந்த அறிவுரைகளை சரியாக கடைபிடிப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.