பாஜகவை எளிதாக விலைக்கு வாங்கி விடலாம்: நாராயணசாமி நக்கல்
புதுச்சேரி: தனது உறுப்பினர்களை யாரும் எளிதில் விலைக்கு வாங்க முடியும் என்பதை பாஜக நிரூபித்து விட்டது என மத்திய திட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கிண்டலடித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிம் அவர் பேசுகையில், லோக்சபாவில் பாஜக உறுப்பினர்கள் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து கொட்டியதிலருந்தே, அந்தக் கட்சி உறுப்பினர்களை யாரும் எளிதில் விலைக்கு வாங்க முடியும் என்பதை அந்தக் கட்சி நிரூபித்து விட்டது.
மாயாவதியை பிரதமர் வேட்பாளராக கூறி வரும் 3வது அணிக்கு வெற்றி கிடைத்து விடக் கூடாது என்ற பயத்தாலும், காங்கிரஸின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பாஜக தலைவர்கள் அத்வானி, ராம்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோர் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம்தான் இது.
ஆனால் பாஜகவின் இதுபோன்ற மலிவான பிரசாரங்கள், நாடகங்கள் மக்களிடம் விலை போகாது.
பாஜக எம்.பிக்கள் கொண்டு வந்த பணத்தில் ஒரு கட்டு, அந்தக் கட்சியின் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள ஒரு வங்கியில் எடுக்கப்பட்டதாகும்.
இந்திய வரலாற்றில் இதுவரை, எந்த ஒரு கட்சியும், பிரதமர் வெளிநாடு போயிருந்த சமயத்தில் ஆதரவை வாபஸ் பெற்றதே இல்லை. ஆனால் அதை இடதுசாரிகள் செய்துள்ளனர்.
ஆட்சிக்கு தந்த ஆதரவை திரும்பப் பெற்ற இடதுசாரிகள், பாஜகவுடன் இணைந்து நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது, சந்தர்ப்பவாத அரசியல் என்று சொல்வதைத் தேவிர வேறு ஒன்றும் இல்லை என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications