முண்டாசு கட்டிவிட்டால் விவசாயிகள் நண்பனா: விஜய்காந்துக்கு கருணாநிதி சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது என விஜய்காந்தை முதல்வர் கருணாநிதி தாக்கினார்.

நேற்று தஞ்சாவூரில் நடந்த தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் தலையில் பச்சை முண்டாசு அனிந்து கொண்டு முதல்வரைத் தாக்கினார் விஜயகாந்த். அதற்கு பதில் தரும் விதத்தில் முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு 'தினமணி' ஒருவரது (விஜய்காந்த்) பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?

பதில்: ஆமாம்- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும்- 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 7,000 கோடி விவசாயிகள் கடனை ரத்து செய்ததும், யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!

விவசாயிகளுக்காக திமுக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ:

இந்தியாவிலேயே முதன் முதலாக 1990ல் திமுக அரசு தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது.

டிசம்பர் 1996ல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.

மீண்டும் நவம்பர் 1997ல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக-விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர்.

மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.

இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி குறைப்பு,

சிறிய, பெரிய விவசாயிகள் அனைவருக்கும் அபராத வட்டி தள்ளுபடி,

கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 7 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கியது,

நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100லிருந்து ரூ. 400 ஆக கழக அரசிலே உயர்த்தப்பட்டது.

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் ரத்து,

விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது,

விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் அமைத்தது,

விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தைகளை தமிழகமெங்கும் அமைத்து தந்தது இந்த அரசு தான்.

நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாகஅளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியது,

நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது எல்லாம் கழக அரசு செய்தது தான்.

கேள்வி: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ம் ஆண்டு இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் விஷம் கக்கியிருக்கிறாரே?

பதில்: காவிரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால்- அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக திமுக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல்வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்சநீதிமன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும்- அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபரமறிந்த வர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

கேள்வி: வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக பிரசுரித்திருக்கிறதே?

பதில்: வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!

கேள்வி: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?

பதில்: பாவம், ஓகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது- ஓகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, ஜப்பான் நாட்டு உதவியை நாடியிருந்தோம். அப்போது 'போக்ரான்' குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை.

ஆனால் 2006ல் திமுகழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடன் பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது.

விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகிவிட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது.

போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்ற வாறு அவர் பேசத் துவங்கினார்.

அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத்திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார்.

தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்து கொண்டார். காவிரி பிரச்சனை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+