ஆகஸ்ட் 8ல் சிரஞ்சீவி கட்சி உதயம்!
ஹைதராபாத்: ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது கட்சியை ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இக்கட்சியில் ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் இடம் அளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பது அறிஞர் சாக்ரடீஸின் கருத்து. இப்போது நடிகர்களின் கடைசிப் புகலிடமாகவும் அரசியல் மாறியுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் நடிகர்கள் கட்சி தொடங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தெலுங்குத் திரையுலகமும் இணைந்துள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் புதுக் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கான பெயர், கட்சிக் கொடி, சின்னம் ஆகியவை ரெடியாகி விட்டன. ஆனால் ஆரம்பிக்கும் தேதியைத்தான் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார் சிரஞ்சீவி.
தேசிய அளவிலும், ஆந்திர அளவிலும் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலை கண்காணித்தபடி இருக்கும் அவர் சரியான சமயத்தில் களம் இறங்க காத்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதியன்று தனது கட்சியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக அவரது மைத்துனரான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.
முதலில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது முன்கூட்டியே 8ம் தேதியன்றே கட்சியை தொடங்கப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்களை அன்று ஹைதராபாத்தில் திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம்.
இந்த நிலையில் சிரஞ்சீவி கட்சியில் குற்றப் பின்னணி கொண்டவர்கள், சமூக விரோதிகள், ரவுடிகள் ஆகியோருக்கு இடம் இல்லையாம்.












Click it and Unblock the Notifications