ராமர் பாலம் பாரம்பரிய சின்னம் அல்ல - மத்திய அரசு
டெல்லி: ராமர் பாலம் தேசிய பாரம்பரியச் சின்னம் அல்ல. அந்தப் பட்டியலிலும் அது இல்லை. தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் அதை அறிவிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முந்தைய விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் நாரிமன், ராமர் பாலத்தை ராமரே அம்பெய்தி உடைத்து விட்டார் என்று கூறியிருந்தார்.
அவர் வாதிடுகையில், அரசின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் தான் கட்டிய பாலத்தை ராமரே அம்பெய்தி உடைத்து விட்டார்.
இதுகுறித்த செய்தி 19வது நூற்றாண்டில், இங்கிலாந்து ஆட்சி வசம் இந்தியா இருந்தபோது இருந்த அரசு வெளியிட்ட அறிவிக்கையில் உள்ளது என்று கூறியிருந்தார் நாரிமன்.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தேசிய பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் ராமர் பாலம் இடம் பெறவில்லை. இதுகுறித்த முடிவை நாடாளுமன்றம்தான் எடுக்க முடியும்.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க இயலாது. அதற்கு பழமையை மட்டும் அளவுகோலாக கொள்வதில்லை. தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கூடிய தகுதியும் ராமர் பாலத்திற்கு இல்லை.
சுனாமி தாக்குதல், புயல், சூறாவளி, நிலநடுக்கம் உள்ளிட்டவை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து முழுமையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்தது.
ராமர் பாலத்தை உடைக்காமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரையை பிரதமர் மன்மோகன் சிங் பரிசீலித்து வருகிறார். அதுதொடர்பான முடிவை நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன் என்றார் நாரிமன்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஓ.பெர்னாண்டஸ் வாதிடுகையில், ரூ. 2500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை தொடங்கியபோது, 95 அடி ஆழத்தில் போடப்படும் கால்வாயால் ஏற்படக் கூடிய இயற்கை சீற்ற ஆபத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளை அரசு மேற்கொள்ளவில்லை என்றார்.
இந்த வழக்கில் நாளையும் விவாதம் தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications