காதல்: பெண் டாக்டருக்கு மிரட்டல்-டாக்டர் கைது
சென்னை: காதலிக்க மறுத்த பெண் டாக்டருக்கு மிரட்டல் விடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரீடா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மேல்மருவத்தூரில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில்,
நான் எம்.பி.பி.எஸ். படித்தபோது என்னுடன் ரஞ்சித்குமார் என்பவர் படித்தார். குரோம்பேட்டையை சேர்ந்த அவரும் நானும் காதலித்தோம். நாளடைவில் அவரது நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களிடம் பேசுவதை சந்தேகத்துடன் பார்ப்பதோடு மட்டுமின்றி கண்டித்தார்.
இதனால் அவருடன் பழகுவதை தவிர்த்தேன். ஆனால் அவர் என்னை தொடர்ந்து காதலித்து வருவதாக சொல்லி தொல்லை தருகிறார். அவரது காதலை நிராகரித்து விட்டாலும் கூட என்னை பணிபுரியும் இடத்துக்கே வந்து தொந்தரவு தருகிறார்.
செல்போன் மூலம் செக்ஸ் எஸ்எம்எஸ்களை அனுப்புகிறார். தன்னை திருமணம் செய்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்று மிரட்டுகிறார். தனது ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் என் குடும்பத்தை பற்றி கேவலமாக வெளியில் தகவல் பரப்புவேன் என்று மிரட்டுகிறார்.
எனவே டாக்டர் ரஞ்சித்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணனை விசாரிக்குமாறு ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரஞ்சித் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications