ரூ.15 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்-போலீஸ் மீட்பு
சென்னை: தொழில்போட்டியில் இரும்புக் கடை உரிமையாளரின் மகனைக் கடத்திய நபரும் அவரது 5 உறவினர்களும் கைது செய்யப்பட்டனர்.
மதுரவாயல் நெற்குன்றம் சாலையில் உள்ள மேட்டுக்குப்பத்தில் பழைய இரும்பு கடை வைத்திருப்பவர் செம்புலிங்கம். இவரது கடை அருகே காளிமுத்து என்பவரும் பழைய இரும்புக் கடை வைத்துள்ளார்.
இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. இந் நிலையில் நேற்றிரவு செம்புலிங்கத்தின் மகன்கள் கிருஷ்ணன் (21), ராமேஸ்வரன் (15) ஆகியோர் திரைப்படத்துக்கு சென்றனர்.
இரவு 11 மணியளவில் கோயம்பேடு சின்மயா நகரில் வந்து கொண்டிருந்தபோது காளிமுத்து மற்றும் அவரது உறவினர்கள் சிலர் உருட்டு கட்டைகளுடன் வந்து இருவரையும் தாக்கிவிட்டு ராமேஸ்வரனை கடத்திச் சென்றனர்.
சிறிது நேரத்துக்குப் பின் கிருஷ்ணனை செல்போனி்ல் தொடர்பு கொண்ட அவர்கள் ரூ. 15 லட்சம் கொடுத்தால் உன் தம்பியை ஒப்படைப்போம். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்.
இதையடுத்து கிருஷ்ணன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலுக்கு வலை வீசப்பட்டது.
இந் நிலையில் கிருஷ்ணனை அக் கும்பல் மீண்டும் தொடர்பு கொண்டு ஜெய்நகர் 1வது மெயின் ரோட்டுக்கு ஆட்டோவில் வருமாறு அவர்கள் கூறினர்.
அவரை ஆட்டோவில் அனுப்பிவிட்டு போலீசார் அதை ரகசியமாக பின் தொடர்ந்தனர். 1வது மெயின் ரோட்டுக்கு வந்தவுடன் கிருஷ்ணன் சென்ற ஆட்டோவை அந்தக் கும்பல் நெருங்கியது.
அவர்களை பின்னாலேயே வந்த போலீசார் சுற்றி வளைத்தனர். ராமேஸ்வரன் மீட்கப்பட்டார்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட காளிமுத்து (47), அவரது உறவினர்கள் ஹரிராமன் (27), தங்கராஜ் (25), முனியாண்டி (23), ஜெயபால் (24), வடிவேல் (24) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications