பி.இ. கவுன்சிலிங்: 7,536 மாணவர்கள் புறக்கணிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாமல் 7,536 மாணவ, மாணவியர் புறக்கணித்து விட்டனர். இவர்கள் தனியார் சுய நிதி கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். நாளை முதல் 2வது கட்ட கவுன்சிலிங் தொடங்குகிறது.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த 11ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள 1,17,693 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் விண்ணப்பத்தை முறையாக வழங்காததால், 2,205 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முதல் கட்ட கவுன்சிலிங்கில் 41,872 பேர் பங்கேற்குமாறு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்களில் 7,536 பேர் கவுன்சிலிங்குக்கே வரவில்லை.
இவர்கள் தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்பில் சேர்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தற்போது அரசு கல்லூரிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. தனியார் கல்லூரிகளில் 47,851 இடங்கள் காலியாக உள்ளன.
2வது கட்ட கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை இது நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 39,765 மாணவர்களுக்கும், 21,676 மாணவிகளுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது.
3வது கட்ட கவுன்சிலிங் 16-ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.