சென்னை மாநகராட்சியில் திமுக-பாமக மோதல்
சென்னை: வன்னியர் சங்கத் தலைவரும் பாமக பிரமுகருமான காடுவெட்டி குரு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் திமுக-பாமக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாமக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.
அதே போல அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலும் மாநகராட்சியில் வாக்குவாதம் நடந்தது.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் கூட்டம் இன்று நடந்தது. திமுகவைச் சேர்ந்த மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆணையர் ராஜேஷ் லக்கானி முன்னிலையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய பாமக மாநகராட்சித் தலைவர் ஜெயராமன்,
காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதை கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பதிலுக்கு பாமகவினரும் கத்தினர்.
இதையடுத்து மன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து ஜெயராமனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மேயர் உத்தரவிட்டார்.
ஆனால் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்று ஜெயராமன் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு மேயர் சம்மதிக்காததால், ஜெயராமன் தலைமையில் பாமக கவுன்சிலர்கள் 16 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தேவி பேசுகையில், மக்களவையில் அரசுக்கு கிடைத்த வெற்றி ஏற்புடையதல்ல என்று கூறி காங்கிரஸை தாக்கினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மேயர்,
மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 28 மாணவ, மாணவியருக்கு ரூ. 8 லட்சம் செலவில் லாப்டாப்கள் வழங்கப்படும்.
தி.நகர் போத்தீஸ் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அடுத்த மாதம் 14ம் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications