For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆள் வைத்து கடத்தினார் அமைச்சர்-தம்பதி வாக்குமூலம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தங்களை ஆள் வைத்துக் கடத்தி, அடைத்து வைத்து நிலத்தை கேட்டு மிரட்டியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.முருகேசன், பழனிவேல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு ஆஜரான ஈரோட்டைச் சேர்ந்த பி.சி.பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பி.மலர்விழி ஆகியோர் இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தனர்.

பழனிச்சாமி, மலர்விழி, அவர்களது மகன் சிவபாலன் ஆகியோரைக் காணவில்ைல என்றும் அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி அவர்களது உறவினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிச்சாமியும், மலர்விழியும் நீதிபதிகள் முருகேசன், பழனிவேல் முன்பு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

நீதிபதிகள் முன்பு இருவரும் அளித்த எழுத்துமூலமான வாக்குமூலத்தில், எங்களது உறவினர் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்ததை அறிந்து நாங்கள் ஆஜராகியுள்ளோம்.

எங்களுக்கு சொந்த ஊரில் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பெருந்துறை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எங்களது பத்து ஏக்கர் நிலத்தை எழுதித் தருமாறு அமைச்சர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி எங்களை மிரட்டினர். வீட்டுக்கும் வந்து மிரட்டினர். ஆனால் அது எங்களது பரம்பரைச் சொத்து என்பதால் எழுதித் தர முடியாது என்று நாங்கள் கூறி விட்டோம்.

இதையடுத்து கடந்த ஜூலை 22ம் தேதி எங்களை அமைச்சர் ராஜாவின் ஆட்கள் கடத்திச் சென்றனர். பின்னர் எங்களை மறைவிடத்தில் வைத்து நிலத்ைதக் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். எங்களது குடும்பத்தில் யாரும் மிஞ்ச மாட்டீர்கள் எனவும் மிரட்டினர்.

ஒரு கட்டத்தில் சொத்துக்களை எல்லாம் கொடுத்து விட்டு ரூ. 1.5 கோடி தருகிறோம் வாங்கிக் கொண்டு போய் விடுங்கள் என்று மிரட்டினர். வெற்றுத் தாளில் கையெழுத்திடுமாறும் மிரட்டினர். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் மிரட்டினர்.

அடியாட்கள் எங்களை மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், அமைச்சர் ராஜா தொலைபேசி மூலம் எங்களுடன் பேசினார். அப்போது, சார் பதிவாளர் அங்கு வருவார். அவரிடம் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி கையெழுத்திட்டுத் தர வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை செய்யாவிட்டால், உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் உயிரோடு விட மாட்டோம் எனவும் அமைச்சர் ராஜா மிரட்டினார்.

இந்த நிலையில் ஜூலை 25ம் தேதி எங்களது மகன் சிவபாலனையும் அமைச்சரின் ஆட்கள் கடத்திச் சென்றனர். பின்னர் ஜூலை 27ம் தேதி எங்களை அமைச்சரின் ஆட்கள் விடுவித்தனர்.

இந்த நிலையில்தான் எங்களது உறவினர் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதை அறிந்து நாங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வந்துள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.

எங்களது ஊரில் உயிருக்கு ஆபத்து உள்ளதால் வழக்கு முடியும் வரை சென்னையில் தங்கியிருக்க விரும்புகிறோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இது மிகவும் முக்கியமான விவகாரம். உடனடியாக இந்தத் தம்பதிக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜா, ஈரோடு எஸ்.பி, பெருந்துறை இந்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் தங்களது விளக்கத்தை ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

அமைச்சர் ராஜா கட்டப் பஞ்சாயத்து நடத்தி நிலத்தை கேட்டு மிரட்டியதாகவும், கடத்திச் சென்று மிரட்டியதாகவும் ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ள புகாரால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X