ஆடித் தள்ளுபடியில் வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனை
முகப்பேர் ஏரிக்கரையில் 170 வீட்டுவசதி வாரிய வீடுகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி வீடுகளாக கட்டப்பட்டன. விற்பனை ஆகாமல் இருந்த இந்த வீடுகளை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக மாணவர்கள் விடுதியாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் விற்காமல் கிடக்கும் இந்த வீடுகளை ஆடித் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த பகுதியில் வீடுகள் விலை சதுர அடிக்கு ரூ. 3 ஆயிரம் ஆக உள்ளது. ஆனால் தள்ளுபடி விலையில் சதுர அடிக்கு ரூ. 980 என விற்க முடிவு செய்துள்ளது.
வீடுகள் முறையே 665 சதுர அடி மற்றும் 758 சதுர அடியில் கட்டப்பட்டவை. இதன் விலை ரூ. 6 லட்சத்து 19 ஆயிரம் முதல் ரூ. 7 லட்சத்து 4 ஆயிரம் வரை ஆகும்.
170 வீடுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 31 வீடுகளும், பழங்குடியினருக்கு 2 வீடுகளும், மாநில அரசு ஊழியர்களுக்கு 31 வீடுகளும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 வீடுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 12 வீடுகளும், முடிதிருத்து வோர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு 7 வீடு களும், 5 வீடுகள் பத்திரிகையாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
3 வீடுகள் வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கும், 63 வீடுகள் பொதுவானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப மனுக்கள் 6-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ. 110.
முகப்பேர் கிழக்கு, முகப்பேர் ஏரி, பெசன்ட் நகர், கே.கே.நகர் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களிலும், சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் வங்கிகளிலும் விண்ணப்பங்கள் விற்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். செப்டம்பர் 31-ந் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும்.