ரவுடி என்கெளன்டர்: போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: பிரபல ரவுடி பாபாசுரேஷ் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய காலதாமதம் செய்யும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பாபா சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு போலீஸாரால் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அவரது மனைவி தேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல்ச ெய்தார்.
தனது கணவரை வேண்டும் என்றே போலீஸார் சுட்டுக் கொன்று விட்டதாக அவர் அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், வயிற்றுவலி காரணமாக பாதிக்கப்பட்ட பாபா சுரேசை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது அவர் தப்பி சென்றுவிட்டார்.
தப்பி ஓடிய அவர் துறைமுகத்தில் பதுங்கி இருந்தார். அவரை பிடிக்க செல்லும்போது அவர் வெடிகுண்டுகளை வீசினார். இதனால் போலீசார் சுட்டதால் அவர் படுகாயம் அடைந்து மரணம் அடைந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள், பாபா சுரேஷின் பிரேதப் பரிசோதனையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டும் போலீஸார் தாக்கல் செய்யாததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே ஒரு வாரம் கொடுத்தாகி விட்டது. வியாழக்கிழமைக்குள் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் கேஸ் டைரியையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications