நெல்லையில் கைதானவர்களுக்கு சிமியுடன் தொடர்பில்லை- போலீஸ்
சென்னையில் டிஜிபி ஜெயின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் கூடுதல் டிஜிபி விஜயக்குமார், உளவுப் பிரிவு ஐஜி ஜாபர் சேட் ஆகியோரும் உடன் இருந்தனர்.
டிஜிபி ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மற்றும் நெல்லையில் குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், சிமி, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது என்றார்.
ஐஜி ஜாபர் சேட் கூறுகையில், சிமி மற்றும் லஷ்கர் அமைப்பின் ரகசிய செயல்பாடுகள் தமிழகத்தில் உள்ளதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுவரை அப்படிப்பட்ட ரகசிய அமைப்புகள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் இல்லை என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நெல்லை பேட்டையில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது அப்துல் கபூர் என்பவர் பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், அன்வர் பாஷா, ஹீரா என்கிற சையத் காசிம், அப்துல் காதர் ஆகியோர் பிடிபட்டனர். அபுதாஹீர் என்பவர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலி அப்துல்லா என்கிற தீவிரவாதிதான் சென்னை, நெல்லையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டுக் கொடுத்தார் என்றும், இதை நிறைவேற்றும் தளபதியாக அப்துல் கபூர் செயல்பட்டார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த சதிசெய்ததாக அலி அப்துல்லா மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிலும் அவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
நக்சலைட் ஒழிப்பு:
கூடுதல் டிஜிபி விஜயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க வனத்துறையினருடன் இணைந்து அதிரடிப்படை செயல்பட்டு வருகிறது.
வன ஊடுறுவல்காரர்களையும், கொள்ளையர்களையும் கண்டுபிடிக்க வனத்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளோம். வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
இதுவரை 200 வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 பேருக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம் என்றார்.