திருமணமாகாத பெண்களுக்கு முதியோர் பென்ஷன்
சென்னை: திருமணமாகாமல் 50 வயதை கடந்த ஏழைப் பெண்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.400 வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலா பேசுகையில், தமிழக அரசு சார்பில் முதியோர், விதவைகள், கணவானால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், பல இடங்களில் திருமணம் ஆகாமலேயே முதிர் வயதை அடைந்த ஏழை பெண்கள் அரசின் விதிகளின்படி இத்தகைய உதவி தொகைகளை வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கும் உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது இந்த ஆலோசனையை முதல்வர் கருணாநிதி பாராட்டி, அவருடைய பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.
இதையடுத்து வாய்ப்பு வசதியற்று திருமணம் ஆகாமலேயே 50 வயதை கடந்த உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்த இயலாத ஏழை, எளிய முதியோருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கப்படும் என்று மாநாட்டின் நிறைவு உரையாற்றும்போது அறிவித்து அரசாணையையும் முதல்வர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை, முதல்வர் கருணாநிதி இன்று காலை சென்னை கோட்டையில் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ள 9,100 ஏழை பெண்களுக்கு மாதம் ரூ. 400 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.