முன்னாள் போஸ்னிய அதிபர் கராட்ஜிக்கிடம் விசாரணை
ஐரோப்பாவின் பின் லேடன் என நேட்டோ நாடுகளால் அழைக்கப்பட்டவர் கராட்ஜிக். செர்பியரான இவர் போஸ்னியாவின் அதிபராக இருந்தபோது 1992-95 காலகட்டத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆயிரக்கணக்கான முஸ்லீம்களையும், குரோஷியர்களையும் கொன்று குவித்தது, சரயேவோ முற்றுகையை திட்டமிட்டது, செரிபிரென்கா படுகொலை என பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ளன.
மக்கள் புரட்சியில் போஸ்னியா வீழ்ந்த பின்னர் தலைமறைவானார் கராட்ஜிக். கிட்டத்தட்ட 13 ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் இந்த மாத தொடக்கத்தில் அவர் முன்னாள் யூகோஸ்லேவிய தலைநகர் பெல்கிரேட் அருகே பிடிபட்டார்.
இந்த நிலையில் இன்று கராட்ஜிக் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா போர்க் குற்றங்களுக்கான கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார். தன் மீதான வழக்கில் வக்கீல் வைக்காமல் தானே வாதாடப் போவதாக ஏற்கனவே கராட்ஜிக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் யூகோஸ்லேவிய அதிபர் ஸ்லொபோதன் மிலசோவிக்கும் இதுபோலவே கைது செய்யப்பட்டு ஐ.நா. போர்க்குற்ற கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். விசாரணையின்போதே அவர் மரணமடைந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.