குண்டுவெடிப்பு-மேற்கு வங்கத்தில் 2 பேர் கைது
டெல்லி: அகமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக மேற்கு வங்கத்தில் 2 பேரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
பெங்களூரை அடுத்து அகமதாபாத்தில் கடந்த 26ம் தேதி தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் 49 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தீவிரவாதிகளை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இன்று 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர். ஜல்பாய்குரி மாவட்டம் சன்டிப்பாரா என்ற இடத்தில் இந்த 2 தீவிரவாதிகளையும் டெல்லி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளும், நாட்டுத் துப்பாக்கிகளும், தோட்டா குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர்கள் யெஸ்ஸின் முகமது (25), முகமது மனியுதின் (42) என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் யெஸ்ஸின் முகமது வங்கதேசத்தைச் சேர்ந்தவர்.
அகமதாபாத் தாக்குதலில் தொடர்புடைய முகமது ஹக்கிமிடம் நடத்தி விசாணையில் சன்டிப்பாரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய வேட்டையில் இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று வடக்கு வங்க ஐஜி கே.எல்.டம்டா தெரிவித்தார்.
இதே பகுதியில் நேற்று இரவு 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர். அதில் 3 பேர் விடுவிக்கப்பட்டு, மற்ற இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.