ஆந்திர ரயிலில் தீ-கர்ப்பிணி உள்பட 20 பேர் பலி
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்-காக்கினாடா இடையிலான கௌதமி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 1.05 மணியளவில் தல்லபுசலப்பள்ளி-மெஹ்பூபாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்துபோது எஸ்-10 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ எஸ்9, 11, 12, 13 ஆகிய மேலும் மேலும் 4 பெட்டிகளுக்கும் பரவியது. அதிகாலை என்பதால் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். தீ மளமளவென பரவவே விழித்துக் கொண்ட பயணிகள் அலறி துடித்தனர்.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்து முட்டி மோதிக் கொண்டு கீழே இறங்கினர். காட்டுப் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டதால் எளிதாக உதவி கிடைக்கவில்லை.
முதல் கட்ட தகவலில் கர்ப்பிணி மற்றும் ஒரு பெண் உள்பட 4 பேர் இறந்ததாக கூறப்பட்டது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாராங்கல் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீயினால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறி தான் பலர் இறந்துள்ளனர்.
விபத்தா? சதியா?:
நாடு முழுவதும் வெடிகுண்டு பீதியில் இருப்பதால் இந்த ரயில் தீ விபத்தில் சதி இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஆய்வு மேற்கொள்ள தடயவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஹைதராபாத்-விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேலை-ரூ. 5 லட்சம் நிவாரணம் லாலு:
இந் நிலையில் ரயிலில் ஏற்பட்ட தீயில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும், பலியானோர் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உதவி தொலைபேசி எண்கள்:
இந்த விபத்தில் பலியானோர், காயமடைந்தோர் குறித்து அறிய கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
செகந்திராபாத்- 09701371062, 09247028390
காகினாடா- 0844-2387220
விஜயவாடா- 0866-3068941