சார்க் மாநாடு-கொழும்பு புறப்பட்டார் மன்மோகன் சிங்
இந்த பயணத்தின்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் 2ம் தேதி கொழும்பில் 15வது சார்க் உச்சி மாநாடு தொடங்குகிறது. 3ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், தீவிரவாதம், பிராந்திய வளர்ச்சி, உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு ஆகியவை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளன.
தெற்காசிய நாடுகளின் முக்கியப் பிரச்சினையாக தீவிரவாதம் உள்ளதால் அதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மன்மோகன் சிங் இன்று காலை கொழும்பு புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.
மாலையில், இந்திய சமூகத்தினரை சந்தித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில், தெற்காசியாவில் தீவிரவாதம் மிகபெரிய ஆபத்தாக எழுந்துள்ளது. இதை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து பலமுறை இலங்கை அரசின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமரும், இலங்கை அதிபரும் விவாதிப்பார்கள் என்றார் சர்னா.
தனது கொழும்பு பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானியையும் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.
சார்க் அமைப்பின் தலைவராக தற்போது இந்தியா உள்ளது. அடுத்து இலங்கைக்கு தலைவர் பதவி போகிறது. முதல் நாள் மாநாட்டின் தொடக்கத்தில், ராஜபக்சே தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.
8 நாடுகளைக் கொண்ட சார்க் அமைப்பின் பார்வையாளர்களாக தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான், கொரியா, ஈரான் ஆகியவை உள்ளனர். இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் சார்க் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியா, மியான்மர் ஆகியவை பார்வையாளர்கள் அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.