ஐடி: தமிழகத்தை தலைமை கேந்திரமாக்குவோம்-கருணாநிதி
சென்னை: தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையில் தமிழகத்தை தெற்காசியாவில் தலைமை கேந்திரமாக மாற்றிக் காட்டுவோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை ஐ.ஐ.டியின் பொன் விழாவில் கருணாநிதி பேசுகையில்,
என்னுடைய நண்பரும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சருமான அர்ஜூன் சிங் உடல் நிலை காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. அவர் விரைந்து உடல் நலம் தேறி நல்ல ஆரோக்கியத்துடன் விளங்க வாழ்த்துகிறேன்.
ஐ.ஐ.டி மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சிறந்த நட்சத்திரங்களாக உலகம் முழுவதும் ஜொலிக்கிறார்கள்.
உயர்ந்த தரத்தை தன்னகத்தே கொண்டுள்ள சென்னை ஐ.ஐ.டி தமிழ்நாட்டுக்கு உலக அளவில் பெருமை சேர்த்து வருகிறது.
நான் சமீபத்தில் தமிழக தகவல் தொழில்நுட்ப கொள்கையை வெளியிட்டேன். அந்தக் கொள்கையில் ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது தெற்காசியாவில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் தமிழகம் தலைமை கேந்திரமாக திகழவேண்டும்.
எங்களுடைய முக்கிய நோக்கம் 2011ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத்துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே.
அந்த நிலையை கண்டிப்பாக எய்து விடுவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. காரணம் தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகத்திறமையான மனிதர்கள் அதிகம் உள்ளனர்.
அதனால் தான் சர்வதேச சாப்ட்வேர் நிறுவனங்கள் தமிழகத்தை தேடி வருகிறார்கள்.
மேலும் தமிழகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் கோவையில் ஐ.ஐ.எம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைப்பதாக அறிவித்தது.
இந்த 3 நிறுவனங்களை அனுமதித்ததற்காக என் மரியாதைக்குரிய நண்பர் அர்ஜூன் சிங்கிற்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மனித சக்தியை மேம்படுத்துவதற்காக ஏழை மாணவர்களுக்காக விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், அரியலூர் ஆகிய 6 இடங்களில் என்ஜினீயரிங் கல்லூரிகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications