கருணாநிதி-பாலுவுக்கு உச்சநீதிமன்றம் கைது எச்சரிக்கை

சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் என்று கூறி அதிமுக சார்பில் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை உடனடியாக விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் தமிழக அரசைக் கலைக்க உத்தரவிடுவோம் எனவும் எச்சரித்தது.
இதையடுத்து உண்ணாவிரதத்தை முதல்வர் பாதியிலேயே கைவிட்டார். மேலும் அதிமுகவின் மனுவுக்கு ஒரு மாத காலத்துக்குள் பதிலளிக்குமாறு முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் பாலு, தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி, போக்குவரத்து அமைச்சர் நேரு, போக்குவரத்துத்துறைச் செயலாளர் சாரங்கி ஆகிய 6 பேருக்கும் உத்தரவிட்டது.
ஆனால், தலைமைச் செயலாளரும் டிஜிபியும் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஜெயலலிதா சொல்வது போல நாங்கள் நீதிமன்ற உத்தரவை எந்த வகையிலும் மீறவில்லை என விளக்கமளித்திருந்தனர்.
ஆனால், முதல்வர், பாலு, நேரு, போக்குவரத்துத்துறைச் செயலாளர் சார்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதில் மனு தாக்கல் செய்யாத முதல்வர் கருணாநிதிக்கும் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
நீங்கள் எந்த மாதிரி மனிதர்கள்?, நீங்கள் எல்லாம் சட்டத்துக்கு மேலானவர்களா?. நாங்கள் முதல்வருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்போம். அவரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.
இறுதியாக 4 வார கால அவகாசம் தருகிறோம். அதற்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் பாலு, போக்குவரத்து அமைச்சர் நேரு, போக்குவரத்துத்துறைச் செயலாளர் சாரங்கி ஆகியோருக்கு உத்தரவிட்டது.
4 வாரத்துக்குள் பதில் தாக்கல் செய்யாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருவதாகவும், இந்த வழக்கில் முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்கும் ஒரு வார கால அவகாசம் தரப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். அப்போது பதில் மனு தாக்கல் செய்ய ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் 6 பேருக்கும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications