இரட்டை கொலை-26 பேருக்கு இரட்டை ஆயுள்!
கரூர்: மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 26 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் செஷன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோவில் நிலம் குத்தகை எடுப்பதில் இரு சமுகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்கள் கோவில் நிலம் குத்தகைக்கு எடுக்க தீர்மானித்து, வீட்டுக்கு வீடு வரி வசூல் செய்து குத்தகை எடுக்க முயன்றனர்.
இதை கண்டித்து மற்ற சமுகத்து மக்கள் ஏலத்தை புறக்கணிப்பு செய்தனர்.
இந்த நிலையில் கோவில் நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்கள் வசமானது.
அதில் அவர்கள் பயிர் செய்திருந்த போது, அதை சிலர் அழித்து விட்டனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு 150 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது கடந்த 03- 07- 1995 அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதற்கு அடுத்த 2 நாட்கள் கழித்து அதாவது, 5ம் தேதியன்று வழக்கு தொடர்பாக நீதி மன்றம் சென்றுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு ஊர் திரும்பிய சிலர் மீது மீண்டும் ஒரு கும்பல் அரிவாள், கத்தி சகிதம் தாக்குதல் நடத்தியது.
அதில் அம்மாசி, வேலு ஆகியோர் படு கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணையில் இருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்து போனார். பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலும், இந்த வழக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் வருவதாலும், இந்த வழக்கை வன்கொடுமை சட்ட பிரிவுகளின் கீழ் நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர் நீதி மன்றத்தில் முறையிடு செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் இந்த வழக்கை டிஎஸ்பி ஒருவர் தலைமையில் மறு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
மேலும், வழக்கின் தன்மையை கருதி விசாரணையை மதுரை நீதி மன்றத்தில் இருந்து கரூர் செஷன்ஸ் நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பெருமளவிலான போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
நீதிபதி அய்யப்பன் அளித்த தீர்ப்பில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக கூறினார்.
இதை கேட்ட குற்றவாளிகளின் உறவினர்கள் கதறி கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த வழக்கில் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக பா.ப. மோகன் மற்றும் தங்வேல், பகத்சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.












Click it and Unblock the Notifications