சென்னையில் ஒரே நாளில் 3 மர்மக் கொலை- பீதி
சென்னை: சென்னையைக் கலக்கி வரும் சைக்கோ கொலை பீதி மீண்டும் தலை தூக்கியுள்ளது. நேற்று மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் 3 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
சென்னை நகரின் வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து 9 பேர் ஒரே மாதிரியான வகையில் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சைக்கோ மனிதனின் செயலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து சைக்கோ நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர ரோந்தில் இறங்கினர். பொதுமக்களும், கம்பு, கட்டைகளுடன் இரவு முழுக்க ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சற்று ஓய்ந்திருந்த மர்மக் கொலைகள் மறுபடியும் தலை தூக்கியுள்ளன. நேற்று மட்டும் 3 பேர் நகரின் பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு வணிக அங்காடி வளாகப் பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அதேபோல புது வண்ணாரப்பேட்டை பகுதியில், ஒருவர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுள்ளார். நீலாங்கரை அருகே ராஜு என்ற வாட்ச்மேன் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தப் புதிய கொலைகளுக்கு சைக்கோ நபர் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications