கரூர்.. தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்
கரூர்: கரூர் அருகே உள்ள மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ளது மேட்டு மகாதானபுரம். இங்கு புகழ்பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது பல காலமாக நடந்து வருகிறது.
இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சர்ச்சைக்குரிய இந்த வழிபாடு நேற்று நடந்தது. தலையில் தேங்காய் உடைப்பதற்காக 515 பேர் ரசீது பெற்று கோவிலின் முன்பு வரிசையாக அமர்ந்திருந்தனர்.
சாமி அருள் வந்த பூசாரி பெரியசாமி ஒவ்வொரு தேங்காயாக எடுத்து வரிசையாக அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் ஓங்கி அடித்து உடைத்தார். அப்போது உடைந்து நொறுங்கிய தேங்காயை அங்கு திரண்டிருந்த பக்தர்கள் புனித பிரசாதமாக எடுத்து சென்றனர்.
அதன் பின்னர் கோவிலில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டது.
20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கக் கூடாது என்று குளித்தலை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கோவில் நிர்வாகத்தினர் டோக்கன் வழங்கினர்.












Click it and Unblock the Notifications