பொதுத் தேர்தலிலும் ஜெயிப்போம்: ஜி.கே.வாசன்
நெல்லை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நெல்லையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும். இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் அவசியமாகும். பாஜ, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்த போதிலும் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இந்த வெற்றி வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். விலைவாசி உயர்வுக்கு சர்வதேச அளவிலான பொருட்கள் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இருப்பினும் விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் ஐககிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடுகள் உள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள், அமைச்சர்கள் அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
சேது சமுத்திர திட்டம் தமிழக மக்களுடைய கனவு திட்டமாகும். இத்திட்டத்தில் மக்களுடைய கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications