பரமக்குடியில் கட்டிப்புரண்டு போலீசார் சண்டை
பரமக்குடி: பரமக்குடி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டைப் போட்டுக் கொண்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கள்ளிக்கோட்டையை சேர்ந்தவர் முருகேசன். பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக உள்ளார். ஓட்டப்பாலம் பகுதியில் சைக்கிளில் வந்த ஒருவரிடம் குடிபோதையில் இருந்த முருகேசன் நேற்று மாலை தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேசனை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது முருகேசன் திடீரென இன்ஸ்பெக்டர் அழகுவை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. உச்சக்கட்டமாக இருவரும் காவல் நிலையம் முன் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்த மற்ற போலீசார் அனைவரும் முருகேசனை பிடித்து அடித்து உதைத்தனர். தகவலறிந்த பரமக்குடி டிஎஸ்பி பெருமாள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் முன்னிலையிலேயே மீண்டும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த டிஎஸ்பி மற்றும் போலீசார் மீண்டும் முருகேசனை கண்டித்தனர்.
பதிலுக்கு ஆத்திரமடைந்த முருகேசன், டிஎஸ்பி உள்ளிட்ட போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து முருகேசனை மருத்துவ பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.












Click it and Unblock the Notifications