முதல்வர் வருகை: மதுரையில் அகதிகளுக்கு தடை
மதுரை: மதுரையில் நடக்கும் 2 நாள் விழாக்களில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அகதிகள் முகாம்களை விட்டு வெளியே வர 6ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் முகாம்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் தங்கியபடி விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்திய கிருஷ்ணநீதன் என்ற நிக்சனை (22), க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் விடுதலைப் புலிகளி்ன் அரசியல் பிரிவு முக்கிய பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்தவர் கிருஷ்ணநீதன். அகதிகள் முகாமில் இருந்து கொண்டு விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பொருட்களை கடத்தி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நாளையும், நாளை மறு தினமும் மதுரையில் நடக்கும் விழாக்களில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள முகாம்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் 5949 பேர் தங்கி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் வருகிற 2 நாட்களும் முகாம் களில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் உள்ள வாலிபர்களின் நடவடிக்கையை கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் முகாம்களில் போலீசார் அதிரடி சோதனையும் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications