சிமி: தடை நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் தடை!
டெல்லி: இஸ்லாமிய தீவிரவாத மாணவர் இயக்கம் என்று குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்ட சிமி அமைப்புக்கு 2010 வரை விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்குவதாக சிறப்பு நடுவர் மன்றம் பரபரப்பான தீர்ப்பளித்தது.
ஆனால், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் சிமியின் தொடர்பு இருப்பதாகக் கூறி மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமிக்கு 2 ஆண்டுகள் தடை வித்தித்து.
பின்னர் இத் தடை ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 2010-ம் ஆண்டு வரை தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது சிமி.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது சிமி. மத்திய அரசு புதிதாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் இப்படி பொத்தாம் பொதுவாக தடையை நீட்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த இயக்கம் தனது மனுவில் கூறியிருந்தது.
இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம் விசாரித்தது. இந்த தடை நீட்டிப்புக்கு போதிய ஆதாரங்களைத் தருமாறு அவர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் கடைசி நிமிடம் வரை, சிமிக்கு எதிராக எந்தப் புதிய ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவே இல்லை.
பழைய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு இயக்கத்துக்கு தடையை நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், ஆதாரமில்லாமல் தடைவிதித்து யாருடைய அடிப்படை உரிமையையும் பறிக்க முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு:
மகாராஷ்ட்ராவின் மாலேகான் என்ற இடத்தில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிமிக்கு தொடர்பு இருப்பதாக கடந்த முறை தடை நீட்டிப்பின் போது மத்திய அரசு கூறியிருந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒரு முறை ஈடுபடும் அமைப்புகள் தங்கள் தீவிரவாதப் போக்கிலிருந்து மாறுவதே இல்லை என்று மத்திய அரசு கூறியிருந்தது.
மேல்முறையீடு:
இந்த தடை விலக்க உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே, இத்தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தொழில் நுட்ப அடிப்படையில் சிமி இயக்கத்தின் மீதான தடையை நடுவர் மன்றம் உறுதி செய்யவில்லை. எனவே மேல்முறையீட்டில் இத்தடை மீண்டும் உறுதி செய்யப்படும் என்றார்.
பாஜக கண்டனம்:
பயங்கரவாத இயக்கமான சிமி மீதான தடை விலக்கப்பட்டதற்கு மத்திய அரசின் மெத்தனப்போக்கே காரணம் என கடுமையாக விமர்சித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, தீவிரவாதத்துக்கெதிரான மென்மையான அணுகுமுறையிலிருந்து மத்திய அரசு இன்னும் மாறவில்லை என்பதையே இது காட்டுவதாகக் கூறியுள்ளார்.
இத்தடை நீக்கத்தை பாஜக கடுமையாக எதிர்க்கும் என்பதோடு, மீண்டும் தடையை அமல்படுத்த நீதிமன்றத்தை நாடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், சிமிக்கு எதிரான ஆதாரங்களை உரிய நேரத்தில் மத்திய அரசுக்கு அளிக்காமல் உள்துறை அமைச்சகம் வேண்டுமென்றே மெத்தனம் காட்டியுள்ளது. எனவே உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
மத்திய அரசு அப்பீல்:
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மனு தாக்கல் செய்தது. அப்போது ஆஜரான மத்திய அரசி்ன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம்,
டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தேச விரோத செயல்களில் சிமி ஈடுபட்டு வருவது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவினர் உள்பட 75 அதிகாரிகள் தந்துள்ள அறிக்கைகளை சாதாரணமாக எடு்த்துக் கொள்ளக் கூடாது என்றார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், சிமி மீதான தடையை நீக்கி சிறப்பு நடுவர் மன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்தது.
மேலும் இந்த வழக்கி்ல் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சிமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications